பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு - BABYCORN GROUNDNUT KAARAK KULAMBU
தேவையான பொருட்கள்:
- பேபிகார்ன் - 10
- வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- பூண்டு - 4 பல்
- புளி - எலுமிச்சை அளவு
- பச்சைமிளகாய் - 2
- சாம்பார்பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
- நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
- அரிசி ஊறிய நீர் - ஒரு கப் (குழம்புக்கு தேவையான அளவு)
- தேங்காய்ப்பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பேபிகார்னை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி, சாம்பார்த்தூள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
புளியை அரிசி களைந்த நீரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். தேங்காய் பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்து வைக்கவும். அல்லது ஃப்ரெஷ் தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து 1/2 கப் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வேர்க்கடலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பேபிகார்ன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும்.
பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.


0 comments:
Post a Comment